Go to full page →

அடியார்க்கு அடியார் CCh 333

சீடர்கள் இராப்போஜன அறைக்குள் பிரவேசித்த பொழுது, அவர்கள் இருதயம் எரிச்சல் உணர்ச்சியால் நிரம்பியிருந்தது. யூதாஸ் கிறிஸ்துவை அடுத்து உட்காருவதற்காக இடது பக்கம் நெருங்கினான்; யோவான் வலது பக்கம் இருந்தான். மகா உயர்ந்த இடம் ஒன்றிருந்தால், அதை யூதாஸ் தனக்குக் கைபற்றத் தீர்மானித்தான். அந்த இடம் கிறிஸ்துவுக்கு அடுத்து இருப்பதே என யூதாள் எண்ணினான். யூதாஸ் ஒரு துரோகி. CCh 333.2

மற்றொரு பிரிவினைக்கும் காரணம் எழுந்தது. விருந்தில் வேலைக்காரன் ஒருவன் விருந்தாளிகள் கால்களைக் கழுவுவது வழக்கம். இந்த வேளையில் அந்தப் பணிக்கு ஆயத்தம் செய்து வைத்திருந்தது. கால் கழுவுகிறதற்காகத் தண்ணீர் குடமும், பாத்திரமும், சீலைத் துண்டும் ஆயத்தமாக இருந்தன். வேலைக்காரனோ வரவில்லை. அதை செய்து வைப்பது சீடர் வேலையில் ஒரு பகுதி. சீடரோ வேலைக்காரன் செய்வதை தாம் செய்வதினால் பெருமை குறைந்து விடும் என்று நினைத்து ஒவ்வொருவரும் தாம் அதைச் செய்யக்கூடாதென்று தீர்மானித்தனர். அனைவரும் அதைக் குறித்து தமக்கு கவலை இல்லை என்று காண்பித்து, அங்கே தாம் செய்ய வேண்டுவது யாதேனும் உண்டு என்று அறியாதவர்போல் நடித்தனர். தங்கள் மெளனத்தினால் தங்களைத் தாழ்த்த மறுத்தனர். CCh 333.3

சீடர் ஒருவருக்கொருவர் பணிவிடை செய்யத் துணியாது அசையாமல் அமர்ந்திருந்தனர். இயேசு சிறிது நேரம் காத்திருந்து அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்த்தார். அப்பால் அத் தெய்வ குரு மேசையை விட்டு எழுந்தார். அங்குமிங்கும் நடப்பதற்கு தடையான மேலாடையைக் களைந்து ஒருபுறம் வைத்தார். ஒரு துண்டை எடுத்து அரையில் கட்டினார். சீடர் திகைப்புடன் ஆவலாய் நோக்கினர். அப்புறம் என்ன நடக்கும் என்று பார்த்து வாய் திறவாமல் காத்திருந்தன்ர். பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார் (யோவான் 13:5). இந்தச் செயல் சீடர் கண்களைத் திறந்தது. அவர்கள் உள்ளத்தில் மனக் கசப்புள்ள வெட்கமும் தாழ்ச்சியும் நிரம்பியது. அவர்கள் அந்த மவுனமுள்ள கடிந்துரையை உணர்ந்தார்கள். தாங்கள் முற்றிலும் புதிய வெளிச்சத்தில் இருக்கக் கண்டார்கள். CCh 334.1

கிறிஸ்து இவ்வாறு தம் அன்பைத் தம் சீடருக்கு வெளிப்படுத்தினார். அவர்களுடைய தன்னலஞ் சிறந்த் சிந்தை அவர் உள்ளத்தை துக்கத்தினால் நிரப்பியது. என்றாலும், அவர்களுடைய வருத்தமுள்ள நிலைமையை நோக்கி, அவர் வாக்கு வாதத்தில் இறங்கவில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் ஒருகாலும் மறக்க முடியாத மாதிரியை அவர்களுகுக் காண்பித்தார். அவர்கள் மேல் வைத்திருந்த அவரது அன்பு குலைந்து போகவுமில்லை. தணிந்து போகவுமில்லை. தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தார் என்பதையும், தாம் கடவுளிடத்திலிருந்து வந்ததையும், கடவுளிடத்திற்குப் போகிறதையும் அவர் அறிந்திருந்தார். அவர்தம் தெய்வத்தன்மையைப் பூரணமாய் உணர்ந்திருந்தார். அவர் தமது ராஜ கிரீடத்தையும் அரச ஆடைகளையும் துறந்து அடிமையின் ரூபம் எடுத்திருந்தார். ஆனாலும் அவர் தமது பூவுலக வாழ்க்கையில் கடைசியாகச் செய்த செயல்களில் ஒன்று, அடிமை போல் அரை கட்டிக்கொண்டு, அடிமையின் தொழிலைச் செய்ததேயாம். CCh 334.2

அவர் அவர்கள் கால்களைக் கழுவினாலும் அவரது மகிமை குறைந்துவிடவில்லை என்பதை அவர்கள் உணரும்படி செய்தார். நீங்கள் என்னைப் போதகர் என்றும், ஆண்டவர் என்றும் சொல்லுகிறீர்கள்; நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர் தான் என்றார். அவர் அளவிடப்படாத பெருஞ் சிறப்புடையவராய் இருந்தும், தொண்டிற்கு வனப்பும் குறிப்பிடத்தக்க சிறப்பும் அளித்தார். கிறிஸ்து போல் உயர்த்தப் பெற்றவர் எவரும் இல்லை; என்றாலும் அவர் மகா தாழ்மையுடைய கடமையைச் செய்வதற்குத் தாழ்ந்து குனிந்தார். பிறர் தனக்குப் பணி செய்வதையே உறுதியாகக் கொள்ளுகின்ற இயல்புடைய இருதயத்தில் குடிகொண்டிருக்கின்ற தன்னலத்தினால் தம் மக்கள் வழுவிப் போகாதபடி, கிறிஸ்து தாமே தாழ்மைக்கு மாதிரியை நிலை நாட்டினார். இப்பெரும் பொருளை அவர் மக்கள் பொறுப்பில் விட்டு விட விரும்பவில்லை. அதன் பெரும் பயனை அவர் நன்கு மதித்தபடியினால் கடவுளுக்குச் சமமாய் இருக்கிறவராகிய அவர் தாமே தம் அடியாருக்கு அடியாராய்ச் செயல் புரிந்தார். அவர்கள் தலைமை ஸ்தானத்திற்காகப் போட்டியிட்டுக்கொண்டிருந்த வேளையில், முழங்கால் யாவும் தமக்கு முன்பாக முடங்கும் பெருமை பெற்றவர், தமக்குத் தொண்டு செய்வதைத் தேவ தூதர்கள் தங்களுக்கு மகிமையாக எண்ணிக்கொண்டிருக்கும் மகிமை படைத்தவர், தம்மை ஆண்டவர் என்று போற்றுகிறவர்களின் அடிகளைக் கழுவுவதற்காகக் குனிந்து நின்றார். தம்மைக் காட்டிக்கொடுத்தவன் கால்களையும் கழுவினார். CCh 335.1

அடியார் கால்களை ஆண்டவர் கழுவி முடித்த பின்பு, அவர் அவர்களை நோக்கி, நான் உங்களுக்குச் செய்தது போல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். என்றார். (யோவான் 13:15) இந்த வார்த்தைகளினால், கிறிஸ்து மரியாதைப் பழக்கத்தை மட்டும் வற்புறுத்தி கூறவில்லை. வழிப் பயணத்தினால் தூசி படிந்த விருந்தாளிகள் கால்களைக் கழுவுவது என்பதிலும் அதிகமான கருத்து அவற்றில் அடங்கியிருக்கின்றது. இங்கே கிறிஸ்து ஒரு பக்திக்குரிய ஆராதனையை ஏற்படுத்தினார். நம் ஆண்டவரது செய்கையினால், இத் தாழ்மையுள்ள சடங்கு ஒரு பிரதிஷ்டை நியமம் ஆகிவிட்டது. அவருடைய சீடர்கள் இத் தாழ்மையும், தொண்டும் ஆகிய அவருடைய பாடங்களை எப்பொழுதும் தங்கள் உள்ளத்தில் பதித்துக்கொள்ளும்படி, இந் நியமத்தைக் கைக்கொள்ள வேண்டும். CCh 336.1