“மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப் பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கு நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.” - உபாகமம் 29:29. Mar 253.1
ஆவிக்குரிய மற்றும் உலகியல் சார்ந்த காரியங்களைப்பற்றி மானிடர் கொண்டிருக்கும் அறிவானது, அரைகுறையானது, பூரண மற்றது; எனவே, அநேகருக்கு வேதவாக்கியக் கூற்றுகளோடு அறிவியலைப்பற்றிய கருத்துகளை இணைத்துப்பார்க்கும் திறன் இல்லை. வெறும் கொள்கைகளையும் யூகங்களையும் அறிவியல் உண்மைகள்போன்று அநேகர் ஏற்றுக்கொள்கிறார்கள். “அறிவியல் என்று பொய்யாகக் கூறப்படுபவைகளை” வைத்து தேவனுடைய வார்த்தையானது பரிசோதிக்கப்படவேண்டுமென்று அவர்கள் எண்ணுகிறார்கள் (1 தீமோத்தேயு 6:20). படைத்தவர் மற்றும் அவரது கிரியைகள், அவர்களது புரிந்துகொள்ளும் திறனுக்கு அப்பாற்பட்டவையாகும். இவைகளை இயற்கையின் சட்டங்களை வைத்து அவர்களால் விளக்கமுடியாத காரணத்தால், வேதாகம வரலாறுகளை நம்பமுடியாது என்று மதிப்பீடுசெய்கிறார்கள். பழைய, புதிய ஏற்பாடு ஆகியவைகளின் விவரத் தொகுதிகளின் நம்பகத் தன்மையைக் குறித்து, சந்தேகிப்பவர்கள் அடிக்கடி மேலும் ஓர் அடி எட்டப்போய், தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதையும் சந்தேகித்து, இயற்கையானது எல்லையற்ற வல்லமையையுடையது என்றும் கூறுகிறார்கள். தங்களது நங்கூரத்தை தங்களைவிட்டுச் செல்லும்படி அனுமதித்துவிட்டார்கள்; எனவே, நம்பிக்கையின்மை என்ற பாறையைச் சுற்றிலும் மோதும்படி விட்டுவிடப்படுகிறார்கள். Mar 253.2
இவ்வாறு அநேகர் தவறுசெய்து, விசுவாசத்தைவிட்டு வழுவிப் போய்விடுகிறார்கள்; பிசாசினால் கவர்ச்சிக்கப்பட்டு, வெளியே இழுக்கப்படுகிறார்கள். புரியாத அநேக இரகசியங்களை மானிடத் தத்துவமானது தேடி விளக்கங்கொடுக்க முயற்சிசெய்திருக்கிறது; ஆனால், இவைகள் நித்தியகாலமாக, யுகங்கள் முழுவதும் ஒரு பொழுதும் வெளிப்படுத்தப்படப்போவதில்லை. தேவன் தம்மைப் பற்றியும், தமது நோக்கங்களைபற்றியும் வெளிப்படுத்தியிருக்கிறவைகளைத் தேடி - ஆராய்ந்து - விளங்கிக்கொள்வார்களானால், யேகோவாவின் வல்லமை, மகிமை, இராஜரீக மேன்மை ஆகியவைகளைப்பற்றி மேற்கூறப்பட்ட கருத்தைப் பெற்றுக்கொள்வார்கள்; பின்னர், தங்களது அற்பமான நிலைமையைத் தெளிவாக உணர்ந்து, தங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட காரியங்களைக்குறித்து மனநிறைவோடிருப்பார்கள்... Mar 253.3
தேவன் மக்களுக்கு தெரிவிக்காதவைகளையும், அவர்கள் புரிந்துகொள்ளவேண்டுமென்று அவர் திட்டமிடாதவைகளையும் குறித்து, மனிதரின் மனங்கள் ஆராய்ச்சிசெய்யவும் யூகிக்கவும் வேண்டுமென்று செய்கின்ற காரியமானது, சாத்தானின் தலைசிறந்த வஞ்சகங்களுள் ஒன்றாகும். இவ்வாறு முயற்சித்ததினால்தான் லூசிபர் பரலோகத்தில் தனது இடத்தை இழந்துவிட்டான். தேவனுடைய நோக்கங்களின் அனைத்து இரகசியங்களும் அவனிடத்தில் நம்பி ஒப்படைக்கப்படவில்லை என்ற காரணத்தால் அதிருப்தியடைந்தான். தனக்கு நியமிக்கப்பட்டிருந்து உன்னதமான இடத்திலுள்ள தனது சொந்த வேலையைக் குறித்து அவனுக்கு விளக்கப்பட்டிருந்ததை அவன் முற்றிலுமாகப் புறக்கணித்தான். அவனது கட்டுப்பாட்டிற்கடியிலிருந்து தூதர்களிடமும் அதேவிதமான அதிருப்தியை உருவாக்கி, அவர்களது விழுகைக்கும் காரனமானான்; இப்போழுது அதே ஆவியை மனிதரின் மனதில் நிரப்புவதற்கு முயன்று, தேவனுடைய நேரடியான பிரமாணங்களைப் புறக்கணிக்கும் படியாக அவர்களை வழிநடத்துகிறான்.⋆ Mar 254.1
வாக்குத்தத்த வசனம்: Mar 254.2
“நான் உனக்கு போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணிவைத்து, உனக்கு ஆலோசனை சொல்வேன்.” - சங்கீதம் 32:8. Mar 254.3