Go to full page →

மிருகத்திற்கு ஓர் சொரூபம் வைக்கப்படுதல்!, ஜூன் 5 Mar 311

“மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.” - வெளிப்படுத்தல் 13:14. Mar 311.1

கிருபையின் காலம் முடிவடையுமுன்னர், மிருகத்திற்கான சொரூபம் அமைக்கப்பட்டுவிடும்; ஏனெனில், இதுவே தேவனுடைய மக்களுக்கு ஒரு மாபெரும் சோதனையாக இருக்கும். இதன்மூலம் அவர்களது நித்தியத்திற்கான முடிவு தீர்மானிக்கப்படும்... Mar 311.2

வெளிப்படுத்தின விசேஷம் 13-ம் அதிகாரத்தில் இந்தப் பொருளைப்பற்றி பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது: “பின்பு வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளை உடையதாயிருந்தது, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது. அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச் சொஸ்தம் அடைந்த முந்தின மிருகத்தைப் பூமியின் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது” - வெளிப்படுத்தல் 13:11,12. பின்னர், அற்புதங்களைச் செய்யும் வல்லமை வெளிப்படுத்தப்பட்டது. “அன்றியும், அது மனுஷருக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து, மிருகத்தின் முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று; மேலும், அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங் கொடுக்கப்பட்டது. அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள் இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது, அதின் நாமத்தையாவது, அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்கிறவன்தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங்கூடாதபடிக்கும் செய்தது.” - வெளி. 13:13-17. Mar 311.3

தேவனுடைய மக்கள் முத்திரையைப் பெற்றுக்கொள்ளுமுன்பாக இந்தச் சோதனையை அவர்கள் கடந்துசெல்ல வேண்டும். அவரது பிரமாணத்தைக் கைக்கொள்வதின்மூலமாக, தேவனுக்கு தங்களது உத்தமத்தை நிரூபித்து, போலியான ஓய்வுநாளை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள், யேகோவா தேவனாகிய கர்த்தரின் கொடியின்கீழ் இருக்கும் அணியில் நிற்பார்கள்; ஜீவனுள்ள தேவனுடைய முத்திரையைப் பெற்றுக்கொள்வார்கள்; பரலோகத்தினின்று தோன்றிய சத்தியத்தை கைவிட்டு, ஞாயிற்றுக்கிழமையை ஏற்றுக்கொள்பவர்கள், மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக்கொள்வார்கள். Mar 312.1

பூலோக வல்லமைகளோடு நடைபெறப்போகின்ற சபையின் இறுதி மாபெரும் போராட்டங்கள் அப்போஸ்தலனாகிய யோவானுக்கு தரிசனத்தில் காட்டப்பெற்றபோது, தேவனுக்கு உண்மையாக இருப்பவர்கள் பெறப்போகும் இறுதி விடுதலை, வெற்றி ஆகியவைகளையும் பார்க்கும்படி அனுமதித்தார்...யுத்தக்களத்தின் பேரொலிக்கும் புகைமூட்டத்திற்கும் அப்பால், சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டியானவரோடு சென்ற கூட்டத்தை அவர் கண்டார். மிருகத்தின் முத்திரைக்குப் பதிலாக, அவர்களது நெற்றியிலே பிதாவின் நாமம் எழுதப்பட்டிருந்தது.⋆ Mar 312.2

வாக்குத்தத்த வசனம்: Mar 312.3

“...பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்...” - யாத்திராகமம் 14:13. Mar 312.4