Go to full page →

தாயின் வேலையின் புனிதம் CCh 410

புருஷனுடன் வாழ்க்கைத் துணைவியாக இருந்து, தாய் தனக்கு ஆதியில் கடவுளால் நியமிக்கப்பட்ட வேலையைச் செய்ய வேண்டும். தாய் என்ற பதம் தரும் சகல பொருளும் நிறைவேற்றும் முறையில் நடக்கும் தாய்மார்கள் உலகத்திற்கு அவசியம். ஆண்கள் கடமைகளை விட பெண்களின் குறிப்பிட்ட சில கடமைகள் மிக மேன்மையும் பரிசுத்தமுமுடையவையென நாம் சொல்வது மிகையாகாது. கடவுள் பயத்தோடும், பலத்தோடும் ஒரு பெண் தன் புனிதக் கடமைகளை யுணர்ந்து பொறுப்பு எடுப்பாளாக. இவ்வுலகத்திற்குப் பயன் படும்படியும், மேலுலக வாசிகளாவதற்கும் ஏதுவாக அவள் தன் பிள்ளைகளை வளர்ப்பாளாக, CCh 410.2

தன் புருஷன் மீது முழுவதும் சார்ந்தவளாக தாய் நடந்து தன் சக்திகள் யாவும் குன்றிடும் அளவில் தன் பலத்தைத் தியாகஞ் செய்யக்கூடாது. தன் தனியாள் தத்துவம் அவனுடைய தத்துவத்துக்குள் மறைந்துபோக விடக்கூடாது. தன் புருஷனோடு சமமாக நின்று தன் புருஷனுக்கு உதவியாக வும் தன் கடமைகளை உண்மையாகவும் செய்ய வேண்டும். ஒருவன் தேச பிரதம நீதிபதியாக இருப்பினும் அல்லது வேறெந்த உயர்ந்த சிறந்த கடமைகளைச் செய்யினும், தாய் தன் பிள்ளைகளை வளர்ப்பதில் உண்மையாயிருப்பின் அதுவே உயர்ந்த சிறந்த வேலையாகும். CCh 410.3

அரியணை அமர்ந்திருக்கும் அரசனும் தாயின் சேவையை விட உயர்ந்த சேவை செய்யவில்லை. தாய் தன் குடும்ப அரசி. மேலான நித்திய வாழ்வுக்கு பிள்ளைகளை ஆளாக்கும் குணங்கட்டும் சக்தி தாயிடமிருக்கிறது. ஒரு தூதனை இதைவிட சிறந்த பணி செய்ய கேட்க முடியாது; ஏனெனில் இப்படிச் செய்வதில் ஒரு பெண் கடவுளுக்குச் சேவை செய்படிச் செய்வதில் ஒரு பெண் கடவுளுக்குச் சேவை செய்கிறாள். தன் வேலையின் மகத்துவத்தைச் சரியாக ஒரு பெண் உணர்ந்து கொள்ளட்டும், அது அவளுக்கு தைரியத்தை ஊட்டும். அவள் தன் வேலையின் மதிப்பை நன்குணர்ந்து, தேவசர்வாயுதம் அணிந்தால் உலகத்தோடு இணைந்து போகும் சோதனைக்கு எதிர்த்துப் போராடலாம். அவள் வேலை இக்காலத்துக்கும் நித்தியத்துக்கும் ஆகும். CCh 411.1

புருஷன் தன் வீட்டிலிருக்கும் குழந்தைகளைக் கவனிக்கும் படி மனைவியிடம் விட்டு விட்டுப் போகும்போது தகப்பனும் புருஷனுமாகிய அவன் செய்யும் வேலைக்கு ஒப்பான மகா முக்கிய வேலையை மனைவி செய்கிறாள். அவன் வெளியில் மிஷனெரி வேலை செய்கிறான், அவள் வீட்டில் மிஷனெரி வேலை செய்து அங்கு எழும் பல சிக்கல்களையும் பாரங்களையும் தாங்கி வருகிறாள். அது தகப்பனுடைய வேலையிலும் மேன்மையானதே. அவள் வேலை பக்தி வினயமானதும் முக்கியமானதுமாகும். வெளியில் செல்லும் ஆண்கள் மிஷனெரி வேலையின் கண்ணியங்களையும், பாராட்டுகளையும் பெறலாம், ஆனால் வீட்டில் உழைக்கும் அவளோ யாதொரு உலக பாராட்டும் பெறாமலிருக்கலாம். அவள் தன் குடும்ப காரியங்களில் ஊக்கங் காட்டி, தெய்வீக மாதிரிக் கேதுவாக அவர்கள் குணங்களை அமைக்க முயலுவாளாயின் தேவ தூதன் அவளைப் பற்றி உலகில் மிகச் சிறந்த மிஷனெரிகளில் ஒருவரென பதிவு செய்வான். மனிதன் பார்க்கிற குறுகிய பார்வையோடு கடவுள் பார்க்கிறதில்லை. CCh 411.2

சீர்கேடான சக்திகளால் உலகம் மலிந்து கிடக்கிறது. டம்பமும் பழக்க வழக்கங்களும் வாலிபர்களைப் பலமாய்த் தாக்குகின்றன. தாய் தன் பிள்ளைகளை கற்பித்து, வழி நடத்தி கட்டுப்படுத்தத் தவறினால், இயல்பாகவே அவர்கள் நன்மையை விட்டு விலகி தீமையைப் பின்பற்ற ஏதுவாகும். எனவே, ஒவ்வொரு தாயும் பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும், அதை எப்படி நடத்த வேண்டும் என்று அடிக்கடி இரட்சகரண்டை போய் ஜெபிக்க வேண்டும். தேவ வசனம் சொல்லும் உபதேசத்திற்கு அவள் செவி சாய்ப்பாளாக; அப்பொழுது அவளுக்கு அவசியத்திற்குத் தக்க ஞானம் அருளப்படும். CCh 412.1

தன் சமயம் விலை யேறப்பெற்றதென ஒவ்வொரு தாயும் உணர்வாளாக; நியாயத்தீர்ப்பு நாளில் அவள் கிரியைகள் பரீட்சிக்கப்படும். அப்பொழுது சிறு கால்களை சரியான பாதையில் நடத்த வேண்டியவர்கள் தங்கள் கடமைகளைச் செய்யத் தவறி அல்லது செய்ய அறியாமற் போனதினால் பல ஆண்கள் பெண்கள் தவறி பெருங் குற்றவாளிகளாகி விட்டரென கண்டு கொள்ளப்படும். அப்படியே உலகிற்கு ஆசிர்வாதமாக சத்திய ஒளியாகவும், மேதைகளாகவும் விளங்கிய பலருக்குத் தங்கள் ஜெபிக்கும் கிறிஸ்தவ தாய்மார்களே அவர்களுடைய செல்வாக்குக்கும் சித்தியாக்கும் இலட்சியங்களுக்கும் முக்கிய ஊற்றுக்களாக இருந்தார்களெனக் கண்டு கொள்ளப்படும். CCh 412.2