Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாபெரும் ஆன்மீகப் போராட்டம்! - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    29—தீமையின் தொடக்கம்!

    (மூலநூல் : The Great Controversy, பக்கம்: 492—504)

    பாவத்தின் தோற்றமும் அது இருப்பதன் காரணமும் அநேக மனங்களுக்கு ஒரு பெரும் குழப்பத்தின் உற்பத்திஸ்தானமாகவே உள்ளது. தீமையின் செயலை அதன் பயங்கர விளைவுகளான ஆபத்துக்களுடனும் பாழ்க்கடிப்புகளுடனும் அவர்கள் காண்கிறார்கள். ஞானத்திலும் வல்லமையிலும் அன்பிலும் முடிவில்லாதவராக இருக்கும் ஒருவரின் மேலாண்மையின்கீழ், இவை எப்படி இருக்கமுடியும்? என்று அவர்கள் கேள்விகேட்கின்றனர். விளக்கம் கண்டிராத ஒரு இரகசியம் இது. அவர்களது நிச்சயமின்மை சந்தேகத்தின் காரணமாக, தேவனுடைய வார்த்தையில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ள, இரட்சிப்பிற்கு அவசியமான சத்தியங்களுக்கு, அவர்கள் குருடாக்கப்பட்டிருக்கின்றனர். பாவம் இருப்பதைப்பற்றிய விசாரணைகளில், தேவன் ஒருபோதும் வெளிப்படுத்தாதவைகளை ஆராய்வதற்கு முயன்று, இதனால் தங்களுடைய கஷ்டங்களுக்கு விடை காணாமல் உள்ளனர். சந்தேகத்தினாலும், அற்பமான ஆட்சேபணைகளினாலும் வெல்லப்படும் சுபாவமுள்ளவர்கள், பரிசுத்த எழுத்துக்களை நிராகரிப்பதற்கு அதையே ஒரு காரணமாகவும் பற்றிக் கொள்ளுகின்றனர். எப்படியானாலும், தேவனுடைய சுபாவம் பற்றியும், அவரது அரசாங்கத்தின் தன்மைபற்றியும், பாவத்தை அவர் கையாளும் கொள்கைகள் பற்றியும் வேதம் போதிக்கிறவைகளை, பாரம்பரியமும், தவறான வேதவிளக்கங்களும் இருளடையச் செய்துள்ளதால், தீமையைப் பற்றிய பிரச்சினையை மனநிறைவாகப் புரிந்துகொள்ளுவதில் மற்றவர்கள் தோல்வி அடைகின்றனர். (1)GCTam 575.1

    பாவத்தின் தோற்றத்தை விளக்கமுடியாததுபோல், அது நிலைத்திருப்பதையும் விளக்குவது இயலாததாக உள்ளது. என்றாலும் பாவம் சம்பந்தப்பட்ட அவரது நடவடிக்கைகளில் உள்ள நீதியும், அனுதாபத்தையும் முழுமையாக வெளிக்காட்டுவதற்கு, பாவத்தின் பிறப்பையும் முடிவையும்பற்றிப் போதுமான அளவிற்கு அறிந்துகொள்ளமுடியும். பாவத்தின் உட்புகுதலுக்கு தேவன் எந்த வகையிலும் பொறுப்பானவர் அல்ல என்பதையும், தெய்வீகக் கிருபை ஒருதலைப்பட்சமாக பின்னிழுத்துக்கொள்ளப்படவில்லை என்பதையும், கலகம் உண்டாவதற்கு வாய்ப்பைக் கொடுக்க தெய்வீக அரசாங்கத்தில் குறைபாடு இருக்கவில்லை என்பதையும்விட, வேதவாக்கியங்களினால் வேறெதுவும் அதிகத் தெளிவாகப் போதிக்கப்படவில்லை. அத்துமீறி நுழைந்த ஒன்றுதான் பாவம். அது இருப்பதற்கு எவ்விதமான காரணமும் கொடுக்க இயலாது. அது மர்மமானது. கணக்குகள் இல்லாதது. அதற்குச் சாக்குப்போக்கு கூறுவதும் அல்லது அது இருப்பதற்கு ஒரு காரணம் காட்டுவதும் கூடுமானால், அது பாவம் இல்லை என்றாகிவிடும். பாவத்திற்கு நம்மால் கொடுக்கக்கூடிய ஒரே விளக்கம், தேவனுடைய வார்த்தையில் கொடுக்கப்பட்டுள்ள “நியாயப்பிரமாணத்தை மீறுவதே” ஆகும். தெய்வீக அரசாங்கத்தின் அஸ்திவாரமாக இருக்கும் பெரும் அன்பின் பிரமாணத்திற்கு எதிராகச் செயல்படும் கொள்கையாக அது உள்ளது. (2)GCTam 576.1

    பாவத்தின் உட்புகுதலுக்குமுன் பிரபஞ்சமெங்கும் சமாதானமும் மகிழ்ச்சியும் நிலவி இருந்தது. அனைத்தும் சிருஷ்டிகரின் சித்தத்துடன் பூரணமான இசைவுள்ளவையாக இருந்தன. தேவனிடம் அன்பு செலுத்துதல் எல்லாவற்றிற்கும் மேலானதாக இருந்தது. ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துதல் பாரபட்சமற்றதாக இருந்தது. தேவனுடைய ஒரே பேறான வார்த்தையாகிய கிறிஸ்து, இயல்பிலும் சுபாவத்திலும் நோக்கத்திலும் நித்திய பிதாவுடன் ஒருமித்தவராக, பிரபஞ்சம் அனைத்திலும் தேவனுடைய ஆலோசனைகள் நோக்கங்கள் அனைத்திலும் பிரவேசிக்கக்கூடிய ஒரே ஒருவராக இருந்தார். பரலோகத்திலுள்ள அனைத்தையும், பிதா, கிறிஸ்துவின் மூலமாகப் படைத்தார். “அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது”- கொலோ. ... 1:16. பரலோகம் முழுவதும் பிதாவுக்கு இணையான உரிமையாளருக்கான பக்தியை கிறிஸ்துவிற்குச் செலுத்தியது. (3)GCTam 576.2

    தேவ அரசாங்கத்தின் அஸ்திவாரமாக அன்பின் பிரமாணம் இருந்ததால், படைக்கப்பட்ட உயிரினங்களின் மகிழ்ச்சி தேவப் பிரமாணத்தின் பெரும் நீதியின் கொள்கையைப் பூரணமாகச் சார்ந்திருப்பதில் மட்டுமே இருந்தது. தேவன் அவரது படைப்புக்கள் அனைத்திடமிருந்தும் அன்பின் சேவையை அவரது பண்பை அறிவுப்புர்வமாக போற்றுவதினால் எழும் தொழுகையையே விரும்புகிறார். வற்புறுத்தலினால் உண்டாகும் ஒரு உறவில் அவர் மகிழ்வதில்லை. தாங்களாகவே மனமுவந்து, அவருக்குச் சேவைசெய்யும் சுயாதீன சித்தத்தை அவர் அனைவருக்கும் தருகிறார். (4)GCTam 576.3

    இந்தச் சுதந்திரத்தை வேண்டாத விதத்தில் மாற்றுவதைத் தெரிந்துகொண்ட ஒருவன் இருந்தான். அவனுக்குள் பாவம் தோன்றியது. அவன் கிறிஸ்துவிற்கு அடுத்தபடியாக, தேவனால் அதிகமாக உயர்விக்கப்பட்டிருந்தான். பரலோகவாசிகளுக்கு நடுவில் அவன் வல்லமையிலும், மகிமையிலும் மிகவும் உயர்ந்தவனாக இருந்தான். அவனது பெயர் லூசிபர்! அவனது வீழ்ச்சிக்குமுன், காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட கேரூபினாக, குற்றமற்ற பரிசுத்தம் உள்ளவனாக இருந்தான். “கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன். நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது;”... “நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணுப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமானகற்களின் நடுவே உலாவினாய். நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள்துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்'எசே. 28:12-15. (5)GCTam 577.1

    பிறரை ஆசீர்வதிக்கவும், தன்னைப் படைத்தவரை மகிமைப்படுத்தவும், லூசிபர் தனது மேன்மைமிக்க வல்லமையைப் பயன்படுத்துவதால், தேவனுடைய தயவிலும், பரலோக தூதர் சேனைகளின் நேசத்திலும் மதிப்பிலும் இருந்திருக்கலாம். ஆனால் “உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்” (எசே. 28:6) என்று தீர்க்கதரிசி சொல்லுகிறான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் சுயத்தை உயர்த்த விருப்பங்கொண்டான். “நீ உன் இருதயத்தைத் தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால்” எசே. 28:6. நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் ... நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே”—ஏசாயா 14:13,14. தேவனால் படைக்கப்பட்டவைகள் பற்று வைப்பதிலும் உறவுகொள்ளுவதிலும், தேவனை முதன்மைபடுத்துவதை விடுத்து, தங்களது சேவையையும் வணக்கத்தையும் தனதாக்க வேண்டும் என்று லூசிபர் முயற்சி செய்தான். முடிவற்றவராக பிதா, அவரது குமாரனுக்குச் சூட்டியிருந்த மேன்மையை அவன் இச்சித்து, அந்த தேவதூதர்களின் பிரபு, கிறிஸ்து ஒருவருக்கு மட்டுமே உரித்தாயிருந்த வல்லமையைத் தனதாகக் கொள்வதைக் குறிக்கோளாகக் கொண்டான். (6)GCTam 577.2

    பரலோகம் முழுவதும் சிருஷ்டிகரின் மகிமையை பிரதிபலிப்பதிலும், அவருக்குத் துதிசெலுத்துவதிலும் மகிழ்ந்திருந்தது. இவ்விதமாக தேவன் மேன்மைப்படுத்தப்பட்டிருந்தபோது, அனைத்தும் சமாதானமும், சந்தோஷ மும் மிக்கவையாக இருந்தன. ஒரு அபஸ்வரம் உண்டாகி, அது வானுலக இசைவுகளைச் சீர்குலைத்தது. சிருஷ்டிகரின் திட்டத்திற்கு எதிரான, சுயத்தை ஆராதித்தல், உயர்த்துதல் ஆகியவை உண்டாகி, தேவனுடைய மகிமையை மேலானதாகக் கொண்டிருந்தவர்களின் உள்ளங்களில், தீமையின் கெடுதலை அறிவிக்கும் குறிகள் தேன்றின. பரலோக தூதர் குழுக்கள் லூசிபருடன் மன்றாடின. சிருஷ்டிகரின் பெரிய தன்மை, நல்லகுணம், நீதி ஆகியவைகளையும், அவரது பிரமாணத்தின் பரிசுத்தமிக்க மாறாத தன்மையையும், தேவகுமாரன் அவன் முன்பாக எடுத்துக்காட்டினார். பரலோகத்தின் ஒழுங்கை தேவன் தாமே ஏற்படுத்தியிருந்தார். அதிலிருந்து விலகிச் சென்றதினால், லூசிபர், தன்னைப் படைத்தவரை கனவீனப்படுத்தி, தன்மீது அழிவைக் கொண்டுவந்தான். முடிவற்ற அன்பினாலும், இரக்கத்தினாலும் கொடுக்கப்பட்ட எச்சரிப்பு, அதைத் தடுக்கும் ஒரு ஆவியை மட்டுமே எழுப்பினது. லூசிபர் எந்த அளவிற்குக் கிறிஸ்துவிற்கு எதிரான தீர்மானமுள்ளவனாக ஆனானனோ, அந்த அளவிற்கு அதிகமாகப் பொறாமை அவனை மேற்கொண்டது. (7)GCTam 578.1

    அவனது சொந்த மகிமையிலிருந்த அகந்தை, அவனை உயர்பதவியை விரும்பச்செய்தது. லூசிபருக்கு வழங்கப்பட்டிருந்த உன்னதமான மேன்மைகள் தேவனுடைய ஈவு என்று போற்றப்படவில்லை, சிருஷ்டிகரிடம் நன்றியையும் காண்பிக்கவில்லை. அவன் தன்னுடைய ஒளியிலும், உயர்விலும் மகிமைப்பட்டு, தேவனுக்குச் சமமாக ஆகவேண்டும் என்ற குறிக்கோள் உடையவனானான். பரலோகத்தின் சேனையினால் அவன் நேசிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டிருந்தான். அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றுவதில் தேவதூதர்கள் மகிழ்ச்சி உள்ளவர்களாக இருந்தனர். அவர்களனைவருக்கும் மேலாக ஞானத்தாலும், மகிமையாலும் அவன் அணிவிக்கப்பட்டிருந்தான். இருந்தாலும் பரலோகத்தில் தேவயாண்மை உடையவராக, பிதாவோடுகூட அதிகாரமும் வல்லமையும் கொண்டவராக தேவகுமாரன் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தார். தேவனுடைய ஆலோசனைகள் அனைத்திலும் கிறிஸ்து கலந்துகொண்டபோது, லூசிபர் அவ்விதமாக தெய்வீக நோக்கங்களில் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. “ஏன்? கிறிஸ்து மட்டும்தான் மேலாதிக்கம் உடையவராக இருக்கவேண்டுமா? அவர் ஏன் இவ்விதமாக தனக்கும் மேலாக மேன்மைப்படுத்தப்பட்டிருக்கிறார்? என்று அந்த வலிமைமிக்க தேவதூதன் கேள்வி கேட்டான். (8)GCTam 578.2

    தேவசமுகத்திலிருந்து உடனே வெளியேறி, தேவதூதர்களுக்கிடையில் அதிருப்தியின் ஆவியைப் பரப்புவதற்காக லூசிபர் சென்றான். இரகசியமாக வேலைசெய்து, தேவனிடம் பயபக்தியாக இருப்பதைப்போல நடித்து, ஒரு காலம்வரை தனது உண்மையான நோக்கத்தை மறைத்துவைத்து, பரலோகவாசிகளை ஆட்சிசெய்திருந்த சட்டங்களில் அதிருப்தியைத் தூண்ட முயன்று, அவை தேவையற்ற கட்டுப்பாட்டைத் திணிக்கின்றன என்று கூறினான். தேவதூதர்களின் இயல்புகள் பரிசுத்தமானவையாக இருந்ததினால், அவர்கள் தங்கள் சுயசித்தம் சொல்லுவதற்குக் கீழ்ப்படியவேண்டும் என்றான். கிறிஸ்துவிற்கு மிகவும் மேலான மேன்மையை அளித்ததினால், தேவன் அவனிடம் அநீதியாக நடந்துகொண்டார் என்று எடுத்துக்காட்டுவதினால் தன்மேல் அனுதாபத்தை ஏற்படுத்த வகைதேடினான். இப்போதுள்ளதைவிட, அதிகமான வல்லமையும் மேன்மையும் வேண்டும் என்று உரிமைபாராட்டுவதினால் தன்னை உயர்த்த உத்தேசிக்காமல், பரலோகவாசிகள் அனைவருக்கும் சுயாதீனம் கிடைக்கவும், அதன் காரணமாக அவர்கள் இப்போது உள்ளதைவிட மேலான நிலையை அடைவதற்கு வகைதேடுவதாகவும் அவன் உரிமைபாராட்டினான். (9)GCTam 579.1

    தேவன் அவரது பெரும் இரக்கத்தினால், லூசிபரிடம் மிகப்பொறுமை உள்ளவராக நீண்டகாலம் சகித்திருந்தார். முதலில் அதிருப்தியின் ஆவியைச் செயல்படுத்தின உடனேயே அவனது உயர்ந்த நிலையிலிருந்து தாழ்த்தப்படவில்லை. விசுவாசமிக்க தேவதூதர்களுக்குமுன், தன்னுடைய தவறான உரிமைகளை எடுத்துக்காட்டின சமயத்திலுங்கூடதாழ்த்தப்படவில்லை. அவன் அதிகக் காலம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருந்தான். மனந்திரும்புதல், கீழ்ப்படிதல் ஆகிய நிபந்தனைகளின்மீது அவனுக்கு மறுபடியும் மறுபடியும் மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது. முடிவற்ற அன்பும், ஞானமும் மட்டுமே வகுக்கக்கூடியதாயிருந்த அப்படிப்பட்ட முயற்சிகள், அவனுடைய தவறுகளை அவன் உணரும்படி மேற்கொள்ளப்பட்டன. இதற்கு முன் பரலோகத்தில் அதிருப்தியின் ஆவி ஒருபோதும் அறியப்படாததாக இருந்தது. ஆரம்பத்தில் லூசிபர் எங்கே நழவிச் சென்றுகொண்டிருக்கிறான் என்பதை அவனே காணாமலிருந்தான். அவனது உணர்சிகளின் உண்மையான தன்மையை அவன் புரியாமலிருந்தான். அவனுக்கு அவனது அதிருப்தி அர்த்தமில்லாதது என்று மெய்ப்பிக்கப்பட்டபோது, தான் தவறில் இருப்பதையும், தெய்வீக உரிமைகள் நியாயமானவை என்பதையும், அதனால் அவைகளைப் பரலோகம் அனைத்திற்கும் முன்பாக அறிக்கைசெய்யவேண்டுமென்ற மன உணர்வினையும் அடைந்தான். அவன் அதைச் செய்திருந்தால், தன்னையும் மற்ற அநேக தேவ தூதர்களையும் அவனால் காப்பாற்றியிருக்கமுடியும், அந்தச் சமயத்தில், அவன் தேவனிடமுள்ள உறவிலிருந்து நீங்கவில்லை. காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட கேரூப் என்னும் தன்னுடைய பதவியை அவன் கைவிட்டிருந்தபோதிலும், தேவனிடத்திற்குத் திரும்பவும் வர விருப்பமுடையவனாக இருந்திருந்தால், சிருஷ்டிகரின் ஞானத்தை ஒப்புக்கொண்டிருந்தால், தேவனுடைய பெரும் திட்டத்தில் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த இடத்தில் திருப்திப்பட்டிருந்தால், அவன் முன்பு வகித்த பதவியில் மீண்டும் அமர்த்தப்பட்டிருந்திருப்பான். ஆனால் அவனது பெருமை அவனைப் பணியவிடாமல் தடுத்துவிட்டது. தனது பாதையில், தான் மனந்திரும்பவேண்டிய அவசியமில்லை என்று தீர்மானித்து, தன்னைப் படைத்தவருக்கு எதிரான மாபெரும் எதிர்வாதத்தில் ஈடுபட்டான். (10)GCTam 579.2

    அதுமுதல் அவனது திறமைமிக்க மனதின் வல்லமைகள் அனைத்தும் வஞ்சகம் செய்வதிலும், அவனது ஆணைக்குக் கீழ்ப்படிட்டிருந்த தேவதூதர்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காகப் பணிசெய்வதிலும் தீர்மானமுடையதாக இருந்தது. கிறிஸ்து அவனை எச்சரித்து அவனுக்கு ஆலோசனை வழங்கினதுங்கூட, அவனது ராஜத் துரோகமான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கென்று திரித்துக் கூறப்பட்டது. அவன்மீதிருந்த அன்புமிக்க நம்பிக்கையினால் அவனுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்தவர்களிடம், அவனது பதவி மதிக்கப்படவில்லை என்றும், அவனது சுதந்திரம் குறைக்கப்பட்டு விட்டதென்றும் சாத்தான் எடுத்துக்கூறினான். கிறிஸ்துவின் வார்த்தைகளைத் தவறாக எடுத்துக்காட்டுவதிலிருந்து, அவை புரட்டானவை என்றும் தவறானவை என்றும் நேரடியாகக் கூறமுன்வந்து, பரலோகவாசிகளுக்குமுன் தன்னைக் கேவலப்படுத்தும் நோக்கம் உடையவராக தேவகுமாரன் இருக்கிறாரென்றும் குற்றம்சாட்டினான். அவனுக்கும் உண்மையான விசுவாசமுள்ள தேவதூதர்களுக்குமிடையில் ஒரு தவறான பிரச்சினையை உண்டுபண்ண அவன் வகை தேடினான். அவனுக்குக் கீழ்ப்படியச்செய்து, அவனது பக்கத்திற்குக் கொண்டுவர முடியாத அனைவரையும், பரலோகவாசிகளின் நன்மையின்மீது கவலையற்றவர்கள் என்று குற்றம்சாட்டினான். அவன் செய்துகொண்டிருந்த அதே வேலையை தேவனுக்கு உண்மையாக இருந்தவர்களின்மீது குற்றமாகக் கூறினான். தேவன் அவனுக்கு அநீதிசெய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டை மேலும் நிலைநிறுத்துவதற்காக, சிருஷ்கருடைய வார்த்தைகளையும் செயல்களையும் தவறாகவே எடுத்துக்காட்டினான். தேவனுடைய நோக்கங்களைப்பற்றிய தந்திரமான வாதங்களினால், தேவதூதர்களைக் குழப்பமடையச் செய்வதே அவனது கொள்கையாக இருந்தது. மிகத் தெளிவாக இருந்த அனைத்தையும் அவன் மூடி மறைத்து, இரகசியங்களாக்கினான். அவனது சாமர்த்தியமான திரித்துக் கூறுதலினால், யேகோவாவின் தெளிவான அறிவிப்புகளின்மீது சந்தேகத்தை வைத்தான். தெய்வீக நிர்வாகத்துடன் அவனது பதவி மிக நெருக்கமான தொடர்பை உடையதாக இருந்தது. ஆகையால் அவன் எடுத்துக்கூறியவைகளுக்கு அது வலுவூட்டியது. அதனால் பரலோக அதிகாரத்திற்கு எதிராகக் கலகம் செய்வதில், அநேகர் அவனுடன் ஒற்றுமைப்படும்படி ஈர்க்கப்பட்டனர். (11)GCTam 580.1

    தேவன் அவரது ஞானத்தினால், அதிருப்தியின் ஆவி நேரடியான கலகச் செயலாக முற்றும்வரை, சாத்தானை அவனுடைய வேலையை தொடர்ந்து நடத்திச்செல்ல அனுமதித்தார். அவனது திட்டங்களின் உண்மையான இயல்பையும் அவனது சுபாவத்தையும் அனைவரும் காணும்படி அவைகளை முழுமையாக முன்னேற அனுமதிக்க வேண்டியது அவசியமாக இருந்தது. அபிஷேகம் பண்ணப்பட்ட கேரூபாக, லூசிபர் மிக மேலானவனாக உயர்த்தப்பட்டிருந்தான். பரலோகவாசிகளால் மிகவும் விரும்பப்பட்டிருந்தான். அவர்கள்மீதிருந்த அவனது செல்வாக்கு பலம் உள்ளதாக இருந்தது. தேவ அரசாங்கம் பரலோகத்திற்குள்ளாகமட்டும் அடங்காமல், அவர் படைத்த அனைத்து உலகங்களையும் ஆண்டது. பரலோகத்திலுள்ள தேவதூதர்களைக் கலகத்தில் சேர்த்துக்கொண்டால் மற்ற உலகங்களையுங்கூட அவ்விதமாகச் சேர்த்துக்கொள்ளலாம் என்று சாத்தான் எண்ணினான். அவனது நோக்கத்தை நிறைவேற்றிட, புரட்டு, ஏமாற்றுதல் ஆகியவைகளைச் செயல்படுத்தி, அவனது பங்கான கேள்வியை சாமர்த்தியமாக முன்வைத்தான். அவனது வஞ்சிக்கும் வல்லமை மிகப் பெரிதாக இருந்தது. தன்னை அவனது தவறுள்ள உடைக்குள் மறைத்துக்கொண்டு, அனுகூலங்களை ஆதாயப்படுத்திக்கொண்டான். பக்திவிசுவாசமான தேவதூதர்களாலுங்கூட அவனது குணத்தை முற்றிலுமாக அறிந்துகொள்ளவோ, அல்லது அவனது செயல் எதை நடப்பிக்கிறது என்பதைக் கண்டுகொள்ளவோ முடியவில்லை. (12)GCTam 581.1

    அப்படிப்பட்ட மிகமேன்மையானவனாக சாத்தான் இருந்தான். அவனது செயல்களனைத்தும் இரகசியம் என்னும் ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. எனவே, அவனது செயலின் உண்மையான தன்மையைத் தேவதூதர்களுக்கு வெளிப்படுத்தவது கடினமானதாக இருந்தது. பாவம் முழுமையாக வளர்ச்சி அடையும்வரை அது தீமைமிக்கது என்று தோன்றாது. இதற்குமுன் தேவனுடைய பிரபஞ்சத்தில் அதற்கு இடம் இருக்கவில்லை. பரிசுத்தர்கள் அதன் இயல்பையும் கொடூரத்தையும் அறியாதவர்களாக இருந்தனர். தெய்வீகப் பிரமாணத்தை ஒருபக்கமாக ஒதுக்கிவைப்பதினால் உண்டாகும் பயங்கரமான விளைவுகளை அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. முதலில் தேவனுக்குப் பக்திவிசுவாசமாக இருப்பதாகப் பாவனை செய்துகொண்டு, சாத்தான் தனது செயல்களை மறைத்துவைத்தான். தேவனுடைய கனத்தையும், அவரது அரசின் உறுதியையும், பரலோகவாசிகள் அனைவரின் நன்மையையும் மேம்படுத்த முனைவதாக அவன் உரிமைபாராட்டிக்கொண்டான். தேவதூதர்களின் மனங்களுக்குள் அதிருப்தியைப் பதியச்செய்துகொண்டிருந்த அதே நேரத்தில், சந்தேகத்தை நீக்குவதற்காக வகைதேடிக்கொண்டிருப்பதாகவும் சாமர்த்தியமாகத் தோன்றச்செய்தான். தேவ அரசாங்கத்திலுள்ள ஒழுங்குகளிலும் பிரமாணங்களிலும் மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்று அவன் வற்புறுத்தியபோது, பரலோகத்திலுள்ள இசைவைப் பாதுகாக்க அம்மாற்றம் அவசியம் என்ற பாவனையில் அது இருந்தது. (13)GCTam 581.2

    பாவத்தைக் கையாள்வதில், நீதியையும் சத்தியத்தையும் மட்டுமே தேவனால் உபயோகிக்க முடியும். தேவனால் பயன்படுத்தப்படமுடியாத முகஸ்துதி, சூது ஆகியவைகளை சாத்தானால் பயன்படுத்தமுடிந்தது. தேவனுடைய வார்த்தையைக் குற்றப்படுத்த அவன் வகைதேடினான். பரலோகவாசிகளுக்கான சட்டதிட்டங்களை வரையறுப்பதில் தேவன் நீதியுள்ளவராக இருக்கவில்லை என்றுகூறி, அவரது அரசாங்கத்தின் அமைப்பைத் தேவதூதர்களின் முன் தவறாக எடுத்துக்காட்டினான். தேவன் அவரால் படைக்கப்பட்டவர்களிடமிருந்து பணிவையும், தாழ்மையையும் அவசியப்படுத்தும் செயலில் அவர் தம்மைத் தாமே உயர்த்த வகைதேடுகிறார் என்றும் அவன் கூறினான். எனவே, தேவ அரசாங்கம் நீதியானது என்றும், அவரது பிரமாணம் பரிபூரணமானது என்றும் பரலோகவாசிகளுக்கும் சகல உலகங்களுக்கும் நடைமுறை விளக்கம் செய்துகாட்டப்படவேண்டும் என்றும், பிரபஞ்சத்தின் நன்மையை மேன்மைப்படுத்த அவன்மட்டும்தான் வகைதேடிக்கொண்டிருக்கிறான் என்பதாகவும் தோன்றும்படிச்செய்தான். அபகரிப்பவனின் உண்மையான சுபாவம்அவனது உண்மையான நோக்கம் அனைவராலும் புரிந்து கொள்ளப்படவேண்டும். மேலும் அவனது தீயசெயல்களினால், அவன் தன்னை வெளிக்காட்ட அவனுக்குக் காலம் கொடுக்கப்படவேண்டும் (14)GCTam 582.1

    பரலோகத்தில் அவனது சொந்த நடத்தையினால் உண்டான குழப்பத் துக்கான காரணத்தை, தேவனுடைய பிரமாணத்தின்மீதும் அவருடைய அரசாங்கத்தின்மீதும் சாட்டினான். தெய்வீக ஆட்சியின் பலன்தான் சகல தீமைகளுக்கும் காரணம் என்று அவன் அறிவித்தான். யேகோவாவின் சட்டங்களை மேன்மைப்படுத்துவது தான் அவனது நோக்கம் என்றும் அவன் உரிமைபாராட்டினான். ஆகவே, அவன் உரிமைபாராட்டுகின்றவைகளின் இயல்பையும், தெய்வீகப்பிரமாணத்தில் செய்ய உத்தேசித்துள்ள மாறுதல் களின் பலனையும் குறித்த செயல் விளக்கத்தை அவன் காட்டியாகவேண்டும். அவனது சொந்தச்செயலே அவனைக் குற்றப்படுத்த வேண்டும். தான் கலகம் செய்வில்லையென்று சாத்தான் ஆரம்ப முதல் சாதித்தான். பிரபஞ்சம் முழுவதும் அவனை முகமூடி அகற்றப்பட்டவனாக காணவேண்டும்! (15)GCTam 582.2

    இதற்குமேலும் அவனைப் பரலோகத்தில் வைத்திருக்க முடியாது என்று முடிவு செய்யப்பட்டபோதும், முடிவில்லாத ஞானமுடையவர் சாத்தானை அழிக்கவில்லை. அன்பினால் உண்டாகக்கூடிய சேவை ஒன்றுமட்டுமே தேவனால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதால், அவருடனுள்ள அவரது படைப்புக்களின் உறவு, அவரது நீதி இரக்கம் ஆகியவைபற்றிய மன உணர்த்துதலைச் சார்ந்ததாக இருக்கவேண்டும். பரலோகவாசிகளும் மற்ற உலகங்களில் உள்ளவர்களும் பாவத்தின் தன்மையையும் அதன் பலனையும் அறிந்துகொள்ள ஆயத்தமற்றவர்களாக இருந்த நிலையில், சாத்தானை அழிப்பதில் உள்ள தேவனின் நீதியையும் இரக்கத்தையும் அப்போது கண்டிருந்திருக்க மாட்டார்கள். அவன் உடனே அழிக்கப் பட்டிருந்தால், அன்பினால் தேவனுக்குச் சேவைசெய்வதைவிட, பயத்தினால் அவர்கள் சேவை செய்திருப்பார்கள். வஞ்சகனின் செல்வாக்கை முற்றிலுமாக அழித்திருக்கமுடியாது. பாவம் அதன் முதிர்ந்த நிலைக்கு வந்தாக வேண்டும். முடிவில்லாத யுகங்கள் நெடுகிலுமாக, பிரபஞ்சத்தின் நன்மைக்காக, சாத்தான் அவனது கொள்கைகளை பூரணமாக முன்னேற்றமடையச் செய்தாகவேண்டும். படைக்கப்பட்ட ஜீவராசிகள் அனைத்தினாலும், தெய்வீக அரசாங்கத்திற்கெதிரான அவனது குற்றச்சாட்டுகள், அவைகளின் உண்மையான வெளிச்சத்தில் காணப்படவேண்டும். சகலவிதமான கேள்விகளுக்கும் அப்பாற்பட்டதாக தேவனுடைய நீதி, இரக்கம், அவரது பிரமாணங்களின் மாறாத தன்மை ஆகியவை என்றென்றைக்குமாக வைக்கப்படவேண்டும். (16)GCTam 583.1

    சாத்தானின் கலகம் பிரபஞ்சம் முழுவதற்கும், வரவிருக்கும் காலங்கள் நெடுகிலும் ஒரு பாடமாகவும், பாவத்தின் தன்மைக்கும் அதன் பயங்கரமான பலன்களுக்கும் நித்தியமான சாட்சியாகவும் காணப்படவேண்டியதாக இருந்தது. சாத்தானின் நியதிகளைச் செல்படுத்தியதின் பலனும், மனிதர்கள் மேலும் தூதர்கள் மேலும் உண்டான பாதிப்புகளும், தெய்வீக அதிகாரத்தை ஒதுக்கிவைப்பதினால் உண்டாகும் பலன்களைக் காட்டும். தேவனுடைய அரசாங்கத்தோடும் அதனுடைய பிரமாணத்தோடும், தேவன் படைத்திருக்கும் சகல ஜீவன்களின் நன்மைமிக்க வாழ்வும் கட்டப்பட்டிருக்கிறது என்று அது சாட்சிபகரும். இவ்விதம், இந்த மீறுதலின் பயங்கரமான அனுபவத்தினுடைய வரலாறு, பரிசுத்தமிக்க ஜீவன்களுக்கு, மீறுதலின் தன்மையைகுறித்து வஞ்சிக்கப்பட்டுவிடாதபடி அவர்களை தடுக்கவும், பாவம் செய்வதிலிருந்தும் அதன் தண்டனையின் பாடுகளிலிருந்தும் காக்கப்படுவதற்கும், ஒரு நித்தியமான பாதுகாப்பாக இருக்கும். (17)GCTam 583.2

    பரலேகத்தில் நிகழ்ந்த இந்த மாபெரும் எதிர்வாதத்தின் முடிவில் அந்த ஆக்கிரமிப்புக்காரன் தன்னை நியாயப்படுத்துவதில் தொடர்ந்தான். மேலான மகிழ்ச்சியின் உறைவிடத்திலிருந்து அவனும் அவனது அனுதாபிகளும் வெளியேற்றப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டபோது அந்தக் கலகக்காரர்களின் தலைவன் சிருஷ்டிகரின் பிரமாணத்தின்மீது தைரியமாக பகிரங்கமாக பழிசாற்றினான். தேவதூதர்களுக்குக் கட்டுப்பாடு அவசியம் இல்லை, அவர்களது சுயசித்தம் அவர்களை எப்போதும் சரியாகவே நடத்தும், அவர்கள் அதைப் பின்பற்ற விட்டுவிடப்படவேண்டும் என்ற அவனது நிலையில் சாத்தான் தரித்துநின்றான். தெய்வீகப்பிரமாணம் அவர்களது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகவும், அந்தப் பிரமாணத்தை நீக்குவதில் வெற்றி அடைவதே அவனது நோக்கம் என்றும், இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலையடைந்தால், பரலோக சேனை மிக உயர்ந்த மகிமையான நிலையில் பிரவேசிக்கும் என்றும் அவன் அறிவித்தான்.(18)GCTam 584.1

    சாத்தானும் அவனது சேனையும் ஒரே இசைவாக, அவர்களது கலகத்திற்கான குற்றச்சாட்டைக் கிறிஸ்துவின்மீது போட்டு, அவர்கள் கண்டிக்கப்பட்டிருக்காவிட்டால் ஒருபோதும் கலகம் செய்திருக்கமாட்டார்கள் என்றனர். இவ்விதமாக அவர்களது விசுவாசமின்மையிலும் கீழ்ப்படியாமை யிலும் உறுதியாக நின்றனர். தேவ அரசாங்கத்தைக் கவிழ்க்க அவர்கள் வீணாக வகை தேடினர். அப்படியிருந்தும் ஒடுக்கும் வல்லமையின் கீழ் குற்றமற்ற அப்பாவிகளாக இருக்கிறோம் என்றும் தேவ தூஷணம் கூறினர். இறுதியில் கலகக்காரர்களின் தலைவனும் அவனது அனுதாபிகளும் பரலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். (19)GCTam 584.2

    பரலோகத்தில் கலகத்தை தூண்டிவிட்ட அதே ஆவி, இன்றும் பூமியிலும் கலகத்தைத் தூண்டிவிடுகிறது. சாத்தான் தேவதூதர்களிடம் எந்தக் கொள்கையைப் பின்பற்றினானோ, அதே கொள்கையை மனிதர்களிடத்திலும் பின்பற்றுகிறான். இப்பொழுது கீழ்ப்படியாமையின் பிள்ளைகளை அவனது ஆவி ஆளுகிறது. அவனைப்போலவே அவர்களும் தேவப்பிரமாணத்திலுள்ள கட்டுப்பாடுகளைத் தகர்க்க வகைதேடுகின்றனர். அவருடைய கற்பனையை மீறுவதின் மூலமாக சுயாதீனம் உண்டாகும் என்று வாக்குத்தத்தம் செய்கின்றனர். பாவத்தைக் கடிந்துகொள்ளுதல் இப்போதும் வெறுப்பையும் தடைசெய்யும் ஆவியையும் எழுப்புகிறது. தேவனுடைய எச்சரிப்பின் தூது மனச்சாட்சிக்குள் கொண்டுவரப்படும்போது, மனிதர்கள் தங்களைத் தாங்களே நீதிமான்களாக்கி, தங்களது பாவப்பாதையில் மற்றவர்களின் அனுதாபத்தையும் தேட சாத்தான் அவர்களை நடத்துகிறான். அவர்களது தவறுகளைச் சீர்திருத்துவதற்குப் பதிலாக, அவர்களைக் கடிந்துகொள்ளுபவர்களின்மீது, இவர்கள் தான் துன்பங்களுக்கு முழுக்காரணமானவர்கள் என்பதுபோல் கோபப்படுகின்றனர். நீதிமானான ஆபேலின் காலம்முதல் நமது காலம்வரை, பாவத்தைப் பழிப்பவர்களின்மீது வெளிக்காட்டப்படும் ஆவியானது அப்படிப்பட்டதாகவே இருக்கிறது! (20)GCTam 584.3

    தேவனை கொடுமைமிக்கவர் என்றும் பயங்கரவாதி என்றும் எண்ணச்செய்ய, பரலோகத்தில் அவருடைய குணத்தை திரித்துக்கூறிய அதேவிதத்தில் அவன் மனிதர்களையும் பாவம் செய்யத் தூண்டினான். இதுவரை வெற்றியடைந்து, தேவனுடைய அநீதியான கட்டுப்பாடுகள் தனது சொந்தக் கலகத்திற்கு தன்னை நடத்தினதுபோலவே மனிதர்களையும் அவர்களது விழுகைக்கு நடத்தினது என்றும் அறிவித்தான். (21)GCTam 585.1

    ஆனால் நித்தியவாசியான அவர் அவரது சுபாவத்தைப்பற்றி “கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், விசாரிக்கிறவர்” (யாத். 34:6,7) என்று அறிவிக்கிறார். (22)GCTam 585.2

    சாத்தானைப் பரலோகத்திலிருந்து விரட்டியடித்ததினால் தேவன் அவரது நீதியை அறிவித்து, அவரது சிங்காசனத்தின் மேன்மையை நிலைவரப்படுத்தினார். ஆனால் மருளவிழுந்த இந்த ஆவியின் வஞ்சகத் திற்குக் கீழ்ப்படிந்து மனிதன் பாவம் செய்தபோது, தேவன் விழுந்தபோன இனத்திற்காக தம்முடைய ஒரே பேறான குமாரனை மரிக்கும்படி கொடுத்ததன்மூலமாக, அவரது அன்பிற்கான சான்றைக் கொடுத்தார். பாவநிவாரணத்தில், தேவனுடைய சுபாவம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. லூசிபர் தெரிந்துகொண்ட பாவமார்க்கத்தில் உள்ள குற்றச்சாட்டை எந்த விதத்திலும் தேவ அரசாங்கத்தின்மீது சுமத்த முடியாது என்பதற்கு பலம் பொருந்திய சிலுவையின் வாதம் பிரபஞ்சம் முழுவதற்குமான செயல்முறை விளக்கத்தைக் கொடுக்கிறது. (23)GCTam 585.3

    பூமியில் இரட்சகர் ஊழியம் செய்தபோது, கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் இடையில் நிகழ்ந்த போட்டியில், பெரும் வஞ்சகனின் முகத்திரை கிழிக்கப்பட்டது. பரலோக தேவதூதர்களும் பக்திவிசுவாசம்மிக்க பிரபஞ்சமும் அவன்மீது வைத்திருந்த பற்றை வல்லமையாக வேருடன் அகற்ற, உலகமீட்பரின்மீது அவன் நடத்தின கொடூரமான போரால்தவிர வேறெதுவாலும் முடிந்திருக்காது. கிறிஸ்து அவனைத் தொழவேண்டும் என்று அவன் துணிகரமாகக் கூறிய தேவதூஷணமிக்க கோரிக்கை மலைச்சிகரத்திற்கும், ஆலயத்தின் கோபுரத்திற்கும், அவரைத் தூக்கிச்சென்ற இறுமாப்புமிக்க தைரியம், கண்ணைச் சுழற்றும் உயரத்திலிருந்து அவரைக் கீழே குதிக்கும்படிக் கூறிய கெட்ட எண்ணம், இடத்திற்கு இடம் அவரை வேட்டையாட விரட்டின உறங்காத கெட்ட செயல், அவரது அன்பை நிராகரிக்கும்படி ஆசாரியர்கள் மக்கள் ஆகியோரது மனங்களை ஏவினது, கடைசியாக “அவனைச் சிலுவையில் அறையுங்கள்”, “அவனைச் சிலுவையில் அறையுங்கள்” என்று கூக்குரலிட்டது ஆகிய இவைகள் அனைத்தும் பிரபஞ்சத்தின் வியப்பையும் கோரபத்தையும் தூண்டியது. (24)GCTam 585.4

    கிறிஸ்துவை நிராகரிக்கும்படி உலகத்தை எழுப்பிவிட்டவன் சாத்தான்தான். இயேசுவை அழிக்கத் தீமையின் பிரபு அவனது வல்லமை அனைத்தையும், தந்திரத்தையும் செயல்படுத்தினான். ஏனெனில் இரட்சகரின் இரக்கம், அன்பு, அவரது மன உருக்கம், மென்மைமிக்க தயவு ஆகியவை தேவனின் சுபாவத்தை உலகத்திற்கு எடுத்துக் காட்டின. தேவகுமாரன் முன்வைத்த உரிமை ஒவ்வொன்றின்மீதும் போட்டியிட்டு, இரட்சகரின் வாழ்க்கையைப் பாடுகளினாலும் துயரத்தினாலும் நிரப்ப அவன் மனிதர்களை அவனது முகவர்களாக அமர்த்தினான். இயேசுவின் ஊழியத்திற்கு இடையூறு செய்யும்படி அவன் பிரயோகித்த ஏமாற்றும் பொய்களும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளின் மூலமாக வெளிக்காட்டப்பட்ட வெறுப்பும், உதாரணம் கூறமுடியாத அவரது நன்மைமிக்க வாழ்க்கைக்கு எதிராக அவர்மீது கூறப்பட்ட கொடூரமான குற்றச்சாட்டுகளும் மிகவும் ஆழமாகப் பதிந்திருந்த பழி வாங்கும் குணத்திலிருந்து எழும்பியிருந்தது. தேவகுமாரனுக்கு எதிராக அடக்கிவைக்கப்பட்டிருந்த பொறாமை, விரோதம், வெறுப்பு, பழிவாங்குதல் ஆகிய அனைத்தும் கல்வாரியில் வெடித்தன. பரலோகம் முழுவதும் இந்தக் காட்சியை மௌனமான திகிலுடன் உற்று நோக்கிக்கொண்டிருந்தது! (25) அந்த மாபெரும் தியாகபலி நிறைவேற்றப்பட்டபின், கிறிஸ்து உயரே எழுந்தருளினபோது, “நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் (நீர் எனக்குத் தந்தவர்களும்) என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்” (யோவான். 17:24) என்னும் அவரது மன்றாட்டை (பிதாவின் முன்) வைக்கும்வரை, தேவதூதர்களின் தொழுகையை ஏற்க மறுத்தார். அப்பொழுது விவரிக்கமுடியாத அன்புடனும், வல்லமையுடனும் தேவனுடைய சிங்காசனத்திலிருந்து, “தேவதூதர்கள் யாவரும் அவரைத் தொழுது கொள்ளக்கடவர்கள்” (எபி. 1:6) என்று பதில் வந்தது. இயேசுவின்மீது ஒரு கறையும் இருக்கவில்லை. அவரது தாழ்மை முடிவடைந்தது. அவரது தியாகபலி பூரணமாயிற்று. சகல நாமங்களுக்கும் மேலான ஒரு நாமம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. (26)GCTam 586.1

    இப்பொழுது சாக்குப்போக்குக் கூறிட இயலாதவிதத்தில் சாத்தானின் குற்றம் தெளிவாக நின்றது. பொய்யனும், கொலைகாரனுமான அவனுடைய உண்மையான சுபாவத்தை அவன் வெளிப்படுத்தினான். அவனது வல்லமையின் கீழிருந்த மனுப்புத்திரரை எந்த ஆவியினால் அவன் ஆண்டானோ, அதே ஆவியை, பரலோகவாசிகளைக் கட்டுப்படுத்த அவன் அனுமதிக்கப்பட்டிருந்தால் வெளிக்காட்டி இருந்திருப்பான் என்பது காணப்பட்டது. தேவனுடைய பிரமாணத்தை மீறுவது சுயாதீனத்தையும், உயர்வையும் கொண்டுவரும் என்று அவன் உரிமை பாராட்டினான். ஆனால், அது அடிமைத்தனத்தையும், கீழான நிலைமையையும் பலனாகக் கொண்டுவந்ததாகக் காணப்பட்டது. (27)GCTam 587.1

    தெய்வீக சுபாவம், அரசாங்கம் ஆகியவைகளுக்கெதிரான சாத்தானின் குற்றச்சாட்டுகள், அதன் உண்மையான வெளிச்சத்தில் தோன்றின. தேவன் அவரது படைப்புகளிடமிருந்து பணிவையும், கீழ்ப்படிதலையும் கட்டாயப்படுத்துவதன் மூலமாக, தம்மைத்தாமே உயர்த்துவதற்கு வகை தேடுகிறாரென்றும், சிருஷ்டிகளிடத்திலிருந்து சுயமறுப்பை கட்டாயப்படுத்திப் பெற்றிருந்த அதே நேரத்தில், அவர்தாமே சுயமறுப்பை நடைமுறைப்படுத்தாதவராக எந்தத் தியாகமும் செய்யாதவராக இருந்தார் என்றும் அறிவித்தான். ஆனால் விழுந்துபோன பாவமிக்க ஒரு இனத்தின் இரட்சிப்பிற்காக, அன்பு செய்யக்கூடிய மாபெரும் தியாகபலியை, பிரபஞ்சத்தின் அதிபதி செய்தார் என்பது இப்பொழுது காணப்பட்டுவிட்டது. ஏனெனில் “தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கினார்” 2 கொரி. 5:19. லூசிபர் மேன்மைப்படுத்தப்படுதலையும் மேலாதிக்கத்தையும் வாஞ்சித்துப் பாவம் நுழைவதற்கான வாசலைத் திறந்தபோது, பாவத்தை அழிப்பதற்காக கிறிஸ்து தம்மைத்தாமே தாழ்த்தி, மரணபரியந்தம் கீழ்ப்படிந்தவரானார்! (28)GCTam 587.2

    கலகத்தின் கொள்கைகளின்மீதுள்ள தேவனுடைய வெறுப்பை அவர் வெளிக்காட்டினார். சாத்தானைக் குற்றப்படுத்துவதிலும் மனிதனை மீட்பதிலும் இருந்த அவரது நீதியை பரலோகம் முழுவதும் கண்டது. தேவனுடைய பிரமாணம் மாறக்கூடாததெனில், அதை மீறுவதற்கான தண்டனை மன்னிக்கப்படக்கூடாததெனில், மீறுகிற ஒவ்வொருவனும் சிருஷ்டிகரின் ஆதரவிலிருந்து நிரந்தரமாகத் தடைசெய்யப்படவேண்டும் என்று லூசிபர் அறிவித்திருந்தான். பாவ இனம் மீட்பிற்கு அப்பால் வைக்கப்பட்டிருப்பதால், அது அவனது உரிமைமிக்க இரை என்று அவன் கூறியிருந்தான். ஆனால் மனிதனின் சார்பில் இருக்கும் கிறிஸ்துவின் மரணம் தோற்கடிக்கப்படமுடியாத வாதமாக இருந்தது. பாவத்தின் தண்டனை தேவனுக்குச் சமமாக இருந்த ஒருவரின்மீது விழுந்தது. மனிதன் அந்தநீதியை ஏற்றுக்கொள்ள சுதந்திரமுள்ளவனாக இருந்தான். மனுஷகுமாரன் சாத்தானின் வல்லமையின்மீது வெற்றியடைந்ததுபோல, மனிதர்களும் பாவத்திற்காக வருந்தும் தாழ்மைமிக்க ஒரு வாழ்க்கையினால் வெற்றியடையக்கூடியவனாக இருந்தான். இவ்வாறாக தேவன் நீதியுள்ளவராகவும், கிறிஸ்துவை விசுவா சிக்கும் அனைவரையும் நீதிமான்களாக்குகிறவராகவும் இருக்கிறார். (29)GCTam 587.3

    ஆனால், மனிதனுடைய மீட்பை நிறைவேற்றுவதற்காகப் பாடுபடவும் மரிக்கவும் மட்டும் கிறிஸ்து பூமிக்கு வராமல், அவர் “வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார்” (ஏசாயா 42:21). இந்த உலக மக்கள் நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளவேண்டியவிதத்தில் அதைக் கைக்கொள்ளவேண்டும் என்பதற்காக மட்டுமல்லாமல், தேவனுடைய நியாயப்பிரமாணம் மாறாதது என்பதற்கான ஒரு நடைமுறை விளக்கத்தை, பிரபஞ்சத்தில் உள்ள உலகங்கள் அனைத்திற்கும் கொடுப்பதற்காகவும் அவர் வந்தார். அதன் உரிமைகள் ஒருபக்கமாக நீக்கிவைக்கக்கூடியவைகளாக இருந்திருந்தால், அதன் மீறுதலுக்காகப் பாவநிவாரணம்செய்ய, தேவகுமாரன் அவருடைய ஜீவனை விட்டிருந்திருக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது. அது மாற்றப்படமுடியாதது என்பதைக் கிறிஸ்துவின் மரணம் மெய்ப்பிக்கிறது. பாவிகள் மீட்கப்படும்படிக்கு செய்யப்பட்ட, அநாதி அன்புள்ள பிதாவையும் குமாரனையும் நெருக்கிய இந்தத் தியாகம், பிரபஞ்சம் முழுவதிற்கும் இந்தப் பாவநிவாரணத் திட்டத்திற்குக் குறைவான வேறு எதுவும், நீதியும் இரக்கமும் தேவனுடைய அரசாங்கத்திற்கும் பிரமாணத்திற்கும் அஸ்திவாரம் என்பதை காண்பிக்கப் போதுமானதாக இருக்காது என்பதை செய்முறையில் விவரிக்கிறது. (30)GCTam 588.1

    இறுதி நியாயத்தீர்ப்பு செயல்படுத்தப்படும்போது, பாவம் இருப்பதற்கு எந்தவிதமாக காரணமும் இல்லை என்பது காணப்படும். எனக்கு எதிராக நீ ஏன் கலகம்செய்தாய்? என்னுடைய ராஜ்யத்திற்கு உள்ளானவர்களை நீ ஏன் என்னிடமிருந்து கொள்ளையிட்டாய் என்று பூமி முழுவதற்கும் நீதிபதியாக இருப்பவர் சாத்தானிடம் கேட்கும்போது, தீமைக்குப் பிறப்பிடமானவன் கூறுவதற்குச் சாக்குப்போக்கு எதுவும் இருக்காது. வாய்கள் யாவும் மூடும். கலகத்தின் சேனைகள் அனைத்தும் பேச்சற்றதாக இருக்கும். (31)GCTam 588.2

    நியாயப்பிரமாணம் மாறாதது என்று அறிவிக்கும் அதே நேரத்தில், பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை பிரபஞ்சத்திற்குக் கல்வாரிச் சிலுவை அறிவிக்கிறது. “முடிந்தது” என்ற இரட்சகரின் மரிக்கும் குரலில் சாத்தானுக்கான சாவுமணி ஒலித்தது. நீண்டகாலமாகத் தொடர்ந்திருந்த மாபெரும் போராட்டம் அப்போது முடிவுசெய்யப்பட்டு, கடைசியாகத் தீமையை ஒழிப்பது நிச்சயமாக்கப்பட்டது. “மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்” (எபி. 2:14) தேவகுமாரன் கல்லறையின் வாசல்கள் வழியாகக் கடந்துசென்றார். தன் உயர்வின் மீதுள்ள விருப்பம் லூசிபரை, “தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; ... உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும்” (ஏசாயா 14: 13,14) கூறும்படி நடத்தினது. “உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன்.... இனி ஒருபோதும் இருக்கமாட்டாய்” (எசேக். 28:18, 19), “இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும்” (மல்கியா 4:1) என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.(32)GCTam 588.3

    பாவத்தின் தன்மைக்கும், அதன் விளைவுகளுக்கும் முழுப் பிரபஞ்சமும் சாட்சியாயிருக்கும். ஆரம்பத்தில் தேவதூதர்களுக்குப் பயத்தையும், தேவனுக்குக் கௌரவக் குறைவையும் கொண்டுவந்த அதன் பூரணமான அழிவு, அவருடைய சித்தத்தின்படி செய்ய விருப்பங்கொண்டிருந்து, தங்களுடைய உள்ளங்களில் அவருடைய பிரமாணத்தை வைத்திருக்கிற பிரபஞ்சத்தின் முன்பு, இப்போது அவருடைய அன்பை நிரூபித்து, அவருடைய கனத்தை நிலைநிறுத்தும். தீமை இனி ஒருபோதும் காணப்படாது. “இடுக்கம் மறுபடியும் உண்டாகாது” (நாகூம் 1:9) என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது. அடிமைத்தனத்தின் நுகம் என்று சாத்தானால் நிந்திக்கப்பட்ட நியாயப்பிரமாணம், சுயாதீனப்பிரமாணம் என்று மேன்மைப்படுத்தப்படும். ஆழம்காணமுடியாத அன்பும் முடிவில்லாத ஞானமும் கொண்டவராக முழுமையாக வெளிப்படுத்தப்பட்ட அவர்மேலிருக்கிற பற்றிலிருந்து சோதிக்கப்பட்டு மெய்ப்பிக்கப்பட்ட ஒரு படைப்பு இனி ஒருபோதும் திரும்பிச் செல்லாது.(33)GCTam 589.1